வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/07/2017

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை 
விமர்சிக்க ஓ.பி.எஸ்.க்கு துணிச்சல் 
இருக்கிறதா? ஸ்டாலின் கேள்வி

“பா.ஜ.க.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்” என திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விட்டால் இன்னும் நான்கு வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் ‘இணைந்து கொள்ள’ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் திரு. ஓ. பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என்றும் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
“எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது”, என்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். ஆக்கபூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடிபிடிக்க ஆசைப்படும் அவர் அசிங்கமான குற்றச்சாட்டை கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் முதலமைச்சராக இருக்கும் திரு. எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேர அரசின் முகத்திரையை தினமும் கிழித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார். சட்டமன்றத்திற்குள் நடக்கும் தி.மு.க.,வின் ஆக்கபூர்வமான விவாதங்களை, குதிரை பேர அரசின் மீது கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயன்று வருவோரின் பட்டியலில் ‘இலவச இணைப்பாக’ ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும் நன்கு தெரிகிறது.

கூவத்தூரில் மிகப்பெரிய ‘கொண்டாட்டம்’ நடத்தி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தபோது ‘இரகசிய கூட்டணி’ அமைத்து திரு. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பாடுபட்டவர் ஓ. பன்னீர் செல்வம்.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு ‘மவுன விரத’ நாடகத்தை நடத்தி விட்டு, பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கொள்ள ‘இரகசிய பேச்சுவார்த்தை’ நடத்தியது திரு ஓ. பன்னீர்செல்வம். அந்த பேச்சுவார்த்தை அம்பலத்திற்கு வந்ததும் ஒரு கமிட்டியை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே பன்னீர்செல்வம்தான். இப்போது முதலமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், “கமிட்டி கலைப்பு”, “இணைப்பு கிடையாது” என்றெல்லாம் வெளியில் கதை அளந்துவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஹோட்டல் ஹோட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருபவர் ஓ. பன்னீர்செல்வம்தான். ஒன்றுகூடி தமிழகத்தை கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும்’ பா.ஜ.க நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்றபோது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை திரு. எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக் கொண்டார்? அதிமுக.,விற்குள் உள்ள இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ‘ரகசிய கூட்டணியின்’ வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? ‘பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு’ என்று ஓ. பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தமம் வேடம் போடலாமா?


ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பற்றி நான் பிரச்னை எழுப்பியபோது திரு. ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில்தான் இருந்தார். அப்போது ஏன் வழக்குபோட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை? சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்விகேட்க துணிச்சல் இல்லாத திரு. ஓ. பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் போய் நின்று கொண்டு “ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி” என்று பேசுவது தி.மு.க.,விற்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு. ‘குட்கா டைரி’ ஊழல், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பியபோதெல்லாம் ‘மவுன விரதம்’ இருந்து விட்டு, இன்றைக்கு அபாண்டமான குற்றச்சாட்டுகளில் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஈடுபடுவது அரசியலில் ‘விபத்தால்’ கிடைத்த இடமும் பறிபோய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் என்று புரிகிறது. ஆனால், மணல் குவாரிகள் ஊழல், பொதுப்பணித்துறை முறைகேடுகள், சேகர் ரெட்டி தொடர்புகள், முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே கூவத்தூரில் கோடி கோடியாக பணம் கொடுக்க ரகசியமாக ஒத்துழைப்பு வழங்கியது போன்ற பயங்கரமான வழக்குகளில் தான் மாட்டிக்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் ‘தான் தப்பித்துக் கொள்வதற்காக’ இல்லாத கூட்டணியை இருப்பது போல் சித்தரிக்க முயலும் திரு. ஓ. பன்னீர்செல்வம் இந்த ரவுண்டிலும் தோல்வியை தழுவுவார் என்பதில் சந்தேகமில்லை. உள்ளபடியே, திரு. எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் நினைத்தால் குதிரை பேர அரசு மீது சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன்?  சேகர் ரெட்டியின் மணல் குவாரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நேருக்கு நேர் கேள்வி எழுப்ப ஏன் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தெம்பும், திராணியும் இல்லை? ஆகவே தி.மு.க.,வின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, டெல்லியில் உள்ளவர்களுக்கு ‘ஆளவட்டம்’ போடும் முயற்சியை கைவிட வேண்டும் என்று திரு. ஓ. பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன்.

ஊழலில் ஒன்றாக திளைத்தவர்கள், துறைவாரியாக பட்டியல் போட்டு வசூலித்தவர்கள், சதவீத கணக்கில் காண்டிராக்டில் ஊழல் பணத்தை சேர்த்தவர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு திருமதி. சசிகலா குடும்பத்திற்கு ‘கும்பிடு’ போட்டு கோடி கோடியாக சம்பாதித்து கொடுத்தவர்கள் இன்றைக்கு ‘புனித வேடம்’ போட்டுக் கொள்ளட்டும். அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. ஆனால், அந்த ஊழலில் மூழ்கிக் கிடக்கும் திரு. ஓ. பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க.,வை வம்புக்கு இழுக்க எந்த தகுதியும் இல்லை என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விட்டால் இன்னும் நான்கு வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் ‘இணைந்து கொள்ள’ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் திரு. ஓ. பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் திரு. எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

  



                                       

03/04/2017

இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி தமிழகத்துக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தும் - மு.க.ஸ்டாலின் உரை

- கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (02-04-2017) திமுக வர்த்தகர் அணியின் மாநில செயலாளர் பாண்டி செல்வம் அவர்களின் இல்லத்தில் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை தேர்தல் பணிமனையில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
 
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி தளபதி அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

மதிப்புக்குரிய தொழிலதிபர் சந்தோஷம் அவர்களே, பேரன்புக்குரிய பேராயர் ஐயா எஸ்ரா சற்குணம் அவர்களே, கவிஞர் காசி முத்துமாணிக்கம் அவர்களே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் அவர்களே, மேடையில் வீற்றுள்ள கழக முன்னோடிகளே, மாவட்ட செயலாளர் சிவலிங்கம் அவர்களே, பகுதி கழக நிர்வாகிகளே, வட்ட கழக செயலாளர்களே, நன்றியுரை ஆற்றியிருக்கும் அருமை சகோதரர் பாண்டி செல்வம் அவர்களே, மணக்கோலம் பூண்டுள்ள மணமக்களே, மணமக்களின் பேற்றோர், உற்றார், உறவினர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அவரது துணைவியார் ஜோதி பாண்டி செல்வம் தம்பதியினரின் அருமை மகன் கதிரவரன் பி.காம்., அவர்களுக்கும், மணலி கே.அன்பழகன் – சாந்தி தம்பதியினரின் அன்பு மகள் சண்முகபிரியா எம்.பி.ஏ., அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளுடன் மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மணவிழாவிற்கு தலைமைப் பொறுப்பேற்று, நிகழ்ச்சியை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பானதொரு வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய மணமக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் குறிப்பாக நம்முடைய பாண்டி செல்வம் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியை நான் காணிக்கையாக்க விரும்புகிறேன்.

இங்கு பேசியவர்கள் பாண்டி செல்வம் பற்றி குறிப்பிடுகையில், நான் ஒரு எளிய தொண்டரின் இல்லத்திருமண விழாவிற்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள். அவர்கள் சொன்ன அடிப்படையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் அவரை ஒரு எளிய தொண்டராக அல்ல வலிய தொண்டராக, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு சிறப்புக்குரிய தொண்டராகவே நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, பாண்டி செல்வம் அவர்கள் இங்கு நன்றியுரை ஆற்றியபோது, ’ஒரு ஏழை தொண்டருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதாக சுட்டிக்காட்டி, அதற்காக பெருமைப்படுகிறேன், நன்றி செலுத்துகிறேன்’, என்று குறிப்பிட்டார். அதையும் கடந்து நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், உள்ளபடியே நமது பாண்டி செல்வம் அவர்கள் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், கழகம் தான் – தலைவர் கலைஞர் அவர்கள் தான் தன்னுடைய மூச்சு, லட்சியம் என்ற உணர்வோடு, தனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ’தனது இளவயது முதல்’ என்று அவர் சொன்னார். இப்போதும் பார்ப்பதற்கு அவர் இளமையாகவே இருக்கிறார். அந்தநிலையில் இருந்து நானும் மணமக்களை வாழ்த்துவதற்கு, போற்றுவதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

01/04/2017

டெல்லியில் மு.க.ஸ்டாலின்: விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு


டெல்லி சென்றுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும் சென்றார். திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரும் உடனிருந்தனர். 


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19வது நாளாக இவர்களின் போராட்டம் நீடிக்கிறது.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 
அரசியல் பணிகளை ஆற்றுவதில் கலைஞருக்கு எவரும் முன்னொருவரில்லை: திருநாவுக்கரசர் புகழாரம்



சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கலைஞர், பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

1949 இல் தி.மு. கழகம் தொடங்கி முதல் முறையாக தேர்தல் களத்தில் 1957 இல் போட்டியிட்டதில் இருந்து தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியே இல்லாமல் வெற்றி மட்டுமே பெற்று சாதனை படைத்தவர் டாக்டர் கலைஞர். சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகளை கடந்திருக்கிற கலைஞர் அவர்கள் செய்த சாதனைகள் அளப்பரியது. தி.மு. கழகத்தின் தொண்டராக நுழைந்து எழுத்தாளராக, பத்திரிகையாளராக, கதாசிரியராக, திரைப்பட வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, கவிஞராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்கட்சித் தலைவராக, ஆறு முறை முதலமைச்சராக என பன்முகத் தன்மை கொண்ட மாபெரும் தலைவராக தமிழ் கூறும் நல்லுலகத்தால் அறியப்பட்டவர் கலைஞர். 

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் முழுநேரமும் விவாதங்களில் பங்கேற்று ஆரோக்கியமான கருத்து மோதல்களை நடத்துவதில் அவருக்கு நிகர் அவர் தான். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுன்டு என்று அண்ணா கூறியதற்கு சட்டமன்றத்தில் செயல் வடிவம் கொடுத்தவர் கலைஞர். ஆளும் கட்சியாக  இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாள்தோறும் ஓய்வின்றி அரசியல் பணிகளை ஆற்றுவதில் இவருக்கு எவரும் முன்னொருவரில்லை.

தமிழக அரசியலை கலைஞர் இயக்குவார், இல்லையெனில் மற்றவர்கள் இவருக்கு எதிராக இயங்குவார்கள். ஆக, தமிழக அரசியலில் நடு நாயகமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருபவர் கலைஞர். அரசியலில் இவரது வெற்றிக்கு காரணம் இவர் எடுக்கிற துணிச்சலான முடிவுகள் தான். 1980 இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதில் முன்னணிப் பங்கு வகித்தவர். அதேபோல, 1998 முதல் 2004 வரை மத்தியில் நடைபெற்ற மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் தியாகத் தலைவி அன்னை சோனியா காந்தி தலைமையில் கூட்டணி அமைய வேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர் கலைஞர். அதன் விளைவாக 2004 இல் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உறுதுணையாக இருந்தவர் கலைஞர்.  

1942 இல் எழுத்துப் பிரதியாக முரசொலியை தொடங்கி 75 ஆண்டுகள் சிறப்பாக நடத்தி பவள விழா கொண்டாடியவர் கலைஞர். முரசொலி நாளேட்டின் மூலம் தான் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை நிலைநாட்டியவர் கலைஞர். 

அரசியல் ரீதியாக எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு அன்போடு பழகக் கூடியவராக இருந்தவர் கலைஞர்.  தனிப்பட்ட முறையில் என் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் காரணமாக எனது குடும்பத்தில் நடைபெற்ற அனைத்து திருமணங்களுக்கும் தலைமையேற்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தவர் கலைஞர். 

15 வயதில் தமிழ் கொடியேந்தி அரசியலில் நுழைந்த கலைஞர் சட்டமன்றத்தில் காலடி பதித்து 60 ஆண்டுகள் ஆகி 93 வயதில் இன்றைக்கு உடல் நலக்குறைவோடு இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. விரைவில் அவர் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உலகத்தில் நடைபெறும் சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறத்தக்க வகையில் ஒரே கட்சியில், ஒரே சின்னத்தில் 13 முறை போட்டியிட்டு 60 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய கலைஞர் அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.



  


14/11/2016

ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை: உண்மையா? மு.ஸ்டாலின் கேள்வி

4 தொகுதி இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இஇப்படியொரு  அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது என்று திமுக பொருளாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது. தான் மறுபிறப்பு கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் அம்மையார் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவர் நலம் பெற வேண்டும் என்பதற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கிருந்தவர்களிடம் நலன் விசாரித்து வந்தவன் என்ற முறையில் அவர் முழு நலன் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த காரணத்தால், தங்களின் உழைப்பில் சம்பாதித்த அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்பாக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் உரிய அளவில் சில்லறை நோட்டுகளைப் பெற முடியாத நிலையில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கடுமையான இந்த சில்லறைத் தட்டுப்பாட்டினால் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டு கையில் இருந்தாலும் பலனில்லாத நிலை உருவாகியுள்ளது.

அரிசி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் ஏழை-நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இப்படியொரு அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது.

மக்களின் நலன் பற்றியோ அவர்கள் வாழும் வாழ்க்கை பற்றியோ சிந்திக்க வேண்டியதில்லை அவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்று அம்மையார் நினைக்கிறாரா, அல்லது அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்படுவது தான் அ.தி.மு.கவின் வெற்றிக்கான கடைசி அஸ்திரமாக இருக்கும் என கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எல்லாவற்றையும் திரைமறைவிலிருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் கணக்குப் போட்டு இப்படியொரு அறிக்கையை வெளியிடச் செய்திருக்கிறார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

அம்மையார் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை அவரே வெளியிட்ட அறிக்கை என்றால், மக்கள் படும் அவதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதைத் தான் அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது என்றால், சொந்தக் கட்சியின் தொண்டர்களையே திசைதிருப்பும் வகையில் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது உறுதியாகிறது.

உண்மை என்ன என்பதை, முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் முழு உடல் நலன் பெற்றுத் திரும்ப வேண்டும் என விரும்புவதுடன் அப்போது முதலமைச்சரான அவரிடம் இது குறித்த விளக்கத்தை, நாட்டுமக்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெற வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? கலைஞர் கேள்வி 

கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? பிரதமர் மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்படுவது சாமானியர்கள்தான் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால்,  இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக நாளேடுகள் வாயிலாகவும், நேரிலும் கண்டு வருகிறோம்.  அதைத்தான் எனது முதல் அறிக்கையிலேயே "வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும்,  இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர் களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும்  தங்களிடம் உள்ள ஒரு சில 500 ரூபாய் நோட்டை வாங்கு வதற்கு யாரும் முன் வராத நெருக்கடி நிலையில் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது” என்று நான் குறிப்பிட்டதைத்தான் அன்றாடம் நேரிலே கண்டு வருகிறோம்.   எனது உடல் நலம் சிறிது குன்றியுள்ள நிலையில், நாட்டில் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.

12-11-2016 தேதியிட்ட ஆங்கில "இந்து” நாளிதழில் முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் “Long queues, dry ATMs fuel anger and frustration” என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், “Two people died in separate incidents on Friday - a septuagenarian, who collapsed while waiting in queue at a Mumbai suburb, and a Kerala State Electricity Board employee, who fell to his death at a bank branch in Kannur”  என்றும் குறிப்பிட்டுள்ளது.

09/11/2016

’முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகள்’: விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்

” தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக ஆட்சி செலுத்த விரும்புகின்ற ’முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை’, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது”

“உதய் திட்டம்”, “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்”, “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்”, “மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு” உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண்டர் செய்து விட்டு, திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும்” என்று திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவேரி பிரச்சினையில் கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்த போது அந்த குழுவிற்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடியாக நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுனர் அவர்களின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.


Labels